ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கடைசி கோட்டையை மீட்டது சிரியா
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடைசி கோட்டையாக கருதப்பட்ட அல்பு கமல் நகரை சிரியா ராணுவம் நேற்று மீட்டது. அந்த நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி பிடிபட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சிரியா ராணுவம் இதனை உறுதி செய்யவில்லை.
சிரியாவின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நாட்டு அதிபர் ஆசாத் படைக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு நேரடியாக போரில் பங்கேற்றது. மேலும் ஈரான் அரசும், ஹிஸ்புல்லா அமைப்பும் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளித்தன.
ரஷ்ய விமானப் படையின் உதவியால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் முக்கிய நகரங்களை அந்த நாட்டு ராணுவம் படிப்படியாக மீட்டது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடைசி கோட்டையாக அல்பு கமல் நகரம் கருதப்பட்டது. அந்த நகரையும் சிரியா ராணுவம் நேற்று மீட்டது.
இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி சோய்கு மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்ய விமானப் படை அல்பு கமல் நகர் மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து சிரியா ராணுவம் அந்த நகரை முழுமையாக மீட்டது. சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். இதற்காக சிரியா அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அல்பு கமல் நகரில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 4 நாட்களில் சோதனை முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.எஸ். தலைவர் கைது?
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, அல்பு கமல் நகரில் பதுங்கியிருந்தாகவும் அவரை சிரியா ராணுவம் பிடித்திருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது. இந்த தகவலை சிரியா அரசோ, ரஷ்ய அரசோ உறுதி செய்யவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்