வட கொரியாவுக்கு எச்சரிக்கையா?- தென் கொரியா - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி
தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்திவரும் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா, தென் கொரியா கப்பற்படைகள் இணைந்து கூட்டுப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் நான்கு நாட்கள் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆசியப் பயணத்தில் தொடர்ந்து வட கொரியாவின் அத்துமீறல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கூட்டுப் பயிற்சியில் 11 அமெரிக்க கப்பல்களும், தென்கொரியாவின் 7 கப்பல்களும் ஈடுபட, தென் கொரியாவின் முக்கியத் தளபதிகள் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சி நடைபெறும் இடங்கள் குறித்த தகவலை தென் கொரியா ராணுவம் கூற மறுத்துவிட்டது.
இந்த கூட்டுப் பயிற்சி குறித்து சியோல் மூத்த ராணுவ அதிகாரி கூறும்போது, “கடற்வழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இன்னும் மேம்பட, இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
சர்வதேச விதிமுறைகளை மீறி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்தது. அவற்றில் 2 ஏவுகணைகள் ஜப்பானின் வான்வெளியில் ஏவி சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அணுகுண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை செய்தது.
மேலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்