Header Ads

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு ஏற்பட்ட நிலை.. கண்டக்டர் செய்த காரியத்தால் உயிர் பிழைத்த பயணிகள்..

திருவில்லிபுத்தூரில் அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

அப்போது துரிதமாக செயல்பட்ட நடத்துனர் உடனடியாக பிரேக்கை பிடித்து பேருந்தை நிறுத்தியதால், 50 பயணிகள் உயிர் தப்பினர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து நேற்று காலை 5.20 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

நெல்லை மாவட்டம் சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்த அழகுராஜ் என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார். அப்பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பேருந்தானது காலை 7.50 மணியளவில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு போக்குவரத்து மிகுந்த காமராஜர் சிலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநர் அழகுராஜூக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பயணி ஒருவர் கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த நடத்துனர் கணேசன் என்பவர் துரிதமாக செயல்பட்டு பிரேக்கை மிதித்து பேருந்தை நிறுத்தினார்.

இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனையடுத்து ஓட்டுநர் அழகுராஜை அருகிலிருந்த திருவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மாற்று டிரைவர் மூலம் பேருந்து, திருவில்லிபுத்தூர் பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. நடத்துனரின் இத்தகைய துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் திருவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.