பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரில், மணவர்களுக்கு நடந்த பயங்கரம்;

பிரான்ஸ் நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மோதல் சம்பவம், தெற்கு பிரான்ஸின் துலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரி ஒன்றிற்கு வெளியே நடந்துள்ளது. கல்லூரியின் மாணவர்கள் மீது மகிழுந்து ஒன்றின் மூலமாகவே குறித்த மோதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மோதலில் சம்மந்தப்பட்ட மகிழுந்து ஓட்டுநரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்மீதான தீவிர புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட மூவரும் சீன வம்சாவளியினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகத் தெரியவில்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரான்ஸில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என கடந்த வாரம் சீன அரசாங்கம், பிரான்ஸ் நாட்டைக் கேட்டுக்கொண்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்!
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்