Header Ads

இந்த நூற்றாண்டின் சவாலான கொலை வழக்கு இதுதானாம்..!

டில்லி; டில்லியை ஒட்டி உள்ள உ.பி., மாநிலத்தை சேர்ந்த நொய்டா நகரத்தில் வசித்து வரும் பல் டாக்டர் தம்பதியான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோரின், 14 வயது மகள் ஆருஷி, வேலைக்காரர் ேஹமராஜ் ஆகியோர் கடந்த, 2008 ம் ஆண்டு மே மாதம், 15ம் தேதி உட்புறமாக பூட்டப்பட்ட வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை சம்பவம் நடந்த போது தல்வார் தம்பதி வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தல்வார் தம்பதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இவர்கள் கொலை செய்யவில்லை என்றால் யார் தான் கொலை செய்தது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அதே நேரத்தில் சி.பி.ஐ., செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சி.பி.ஐ., இயக்குனராக 2010 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இருந்த ஏ.பி.சிங் இந்த கொலை வழக்கு குறித்து என்டிடிவி இணைய தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

தல்வார் தம்பதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்த பிறகு, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், இந்த இரட்டை கொலைகளை யார் தான் செய்து இருக்க கூடும் என பல்வேறு யூகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொலை வழக்கு விசாரணையை உ.பி., போலீசாரும், சி.பி.ஐ.,யும் சரியாக விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன.

உ.பி., போலீசார் விசாரணை


ஆருஷியும், ஹேமராஜும், 2008 ம் ஆண்டு மே மாதம், 15ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.


16ம் தேதி காலை, அந்த வீட்டுக்கு உள்ளூர் போலீசார் சென்றனர். ஆனால், அந்த வீட்டை முழுமையாக சோதனை செய்ய வேண்டும், சம்பவம் நடந்த வீட்டை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் அலட்சியாக இருந்து விட்டனர்.

வீட்டை முழுமையாக சோதனை செய்து இருந்தால், அன்றைய தினமே வீட்டின் மொட்டை மாடியில் வேலைக்காரர் ஹேமராஜ் உடலை போலீசார் கண்டு எடுத்து இருக்க முடியும். அதற்கு பதில், ஆருஷியை ேஹமராஜ் தான் கொலை செய்து இருக்கலாம், தலைமறைவாக இருக்கும் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோணத்தில் தீவிரமாக செயல்பட்டனர்.


அதற்குள், கொலை சம்பவம் நடந்த வீட்டிற்குள் பத்திரிகையாளர்களும், மக்களும் புகுந்து பார்வையிட்டனர். இதனால் கைரேகைகளும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டன. அன்றைய தினம் நொய்டா நகருக்கு வி.ஐ.பி.,க்கள் வருகை இருந்தது. இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த பணியை கவனிக்க சென்று விட்டனர்.


முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த கொலைகளை வெளியாட்கள் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று உ.பி., போலீசார் கூறினர். ராஜேஷ் தல்வார் வீடு மிகவும் பாதுகாப்பானது. வெளியில் இருந்து யாரும் கதவை உடைக்காமல் உள்ளே புக முடியாது. ஆனால், அது நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

அதே போல், பொருட்கள் கொள்ளையடிக்கப்படவில்லை என்று வீட்டில் இருந்த தல்வார் தம்பதியும் உறுதி செய்தனர். அடுத்த சில நாட்களில் இந்த வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது என போலீசார் அறிவித்தனர். மே மாதம், 24ம் தேதி ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார்.
சி.பி.ஐ., விசாரணை


இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ., 2008ம் ஆண்டு மே 31ம் தேதி முதல் மேற்கொள்ள துவங்கியது. துவக்கத்தில், அந்த வீட்டில் வேலை பார்த்த மூன்று பேர் மீது தான் சி.பி.ஐ., கவனம் செலுத்தியது. இரண்டு விஷயங்களில் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.முதல் விஷயமாக, நேபாளிகள் மட்டும் பயன்படுத்தும், 'குக்ரி' எனப்படும் பிரத்யேக கத்தி, வேலைக்காரர் கிருஷ்ண மண்டல் என்பவரிடம் இருந்து கைப்பற்றபட்டது. அவர், தல்வார் தம்பதியிடம் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார். அவர் வைத்து இருந்த கத்தி மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். (ஆனால், தடயவியல் பரிசோதனையின் போது, அந்த கத்தியில் மனித ரத்தம் படியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது). இதே போல், ராஜ்குமார், விஜய் மண்டல் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


குற்றச்சாட்டு:




இரண்டாவது விஷயமாக, மூன்று வேலைக்காரர்களிடமும், பெங்களூருவில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த சோதனை மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சோதனையை நடத்திய நிபுணர், முக்கிய வழக்குகளில் சாட்சியங்களை அழிப்பவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த பரிசோதனை கூடத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அத்துடன் உண்மையை கண்டறியும் சோதனை முடிவுகள் சட்டப்படி சாட்சியமாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது. சி.பி.ஐ., அதிகாரிகள் குழு, 2008 ம் ஆண்டு செப்., 9ம் தேதி தங்கள் விசாரணையை முடித்தனர்.

மூன்று வேலைக்காரர்கள் மீது குற்றச்சாட்டு கூற போதிய சாட்சியங்கள் இல்லை என இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
2வது சி.பி.ஐ., குழு


இதன் பிறகு, புதிய சி.பி.ஐ., அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே நடந்த விசாரணையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரிக்கவும் முற்பட்டனர். இரட்டை கொலை சம்பவம் நடந்த போது, மூன்று வேலைக்காரர்களும் வேறு இடத்தில் இருந்தனர் என்பதற்கு சரியான, 'அலிபி' இருந்தது. எனவே, இரண்டாவது குழு அவர்களிடம் விசாரணை நடத்தும் முடிவை கைவிட்டது. இரட்டை கொலை நடந்த நாளில் கிருஷ்ண மண்டல் தான் தங்கி இருக்கும் வாடகை வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார் என்பதை உ.பி., போலீசார் கண்டுபிடித்தனர். அவர் இரவு முழுவதும் அந்த வீட்டில் தான் இருந்தார் என்பதை வீட்டின் உரிமையாளரும் உறுதி செய்தார்.

ராஜ்குமார், தான் புதிதாக வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை, இரவு 12 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு காரில் அழைத்து வந்துள்ளார். மேலும், அவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார். மேலும், அந்த வீட்டில் இருந்து தல்வார் வீடு, வெகு தூரத்தில் இருந்தது. நடந்து சென்றால் ஒரு மணி நேரமும், சைக்கிளில் சென்றால் 20 நிமிடங்களும் ஆகும். அதே போல், விஜய் மண்டலுக்கும் சரியான, 'அலிபி' இருந்தது.


தல்வார் வீட்டின் கதவை உடைத்து யாரும் உள்ளே நுழையவில்லை. கொலை நடந்த இடத்தில், வேலைக்காரர்களின் கைரேகையோ, டி.என்.ஏ., மாதிரிகளோ கிடைக்கவில்லை. அந்த காலனியில் இருந்த செக்யூரிட்டிகளும் அன்று இரவு காலனிக்குள் வேலைக்காரர்கள் யாரும் வரவும் இல்லை; வெளியே செல்லவும் இல்லை என்று தெரிவித்தனர். அதே போல் வெளியாட்களும் உள்ளே வரவில்லை என்பதையும் உறுதி செய்தனர்.


அத்துடன், இரட்டை கொலை வழக்குக்கும் வெளியாட்களுக்கும் எந்த சம்பவமும் இல்லை என்பதும் முடிவு செய்யப்பட்டது. காரணம், பொருட்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை; விரோத மனப்பான்மை யாருக்கும் இல்லை; கொலை செய்யும் அளவுக்கு வெளியாட்களுக்கு தகுந்த காரணம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன், ஆருஷி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கடைசியாக, ஆருஷியின் அறைக்குள், அவர் கதவை திறக்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. அவரது பெற்றோரான தல்வார் தம்பதி வைத்திருக்கும் சாவி மூலம் அந்த அறை கதவை திறக்க முடியும்.

இரட்டை கொலை வழக்கில், தல்வார் தம்பதியின் தொடர்பை தான் இரண்டாவது சி.பி.ஐ., குழு தீவிரமாக ஆய்வு செய்தது. அவர்கள் கீழ் கண்ட காரணங்களுக்காக தல்வார் தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என பரிந்துரை செய்தனர்.
தல்வார் தம்பதிக்கு எதிரான காரணங்கள்


* ஆருஷியை கொலை செய்தது வேலைக்காரர் ஹேமராஜ் தான் என உ.பி., போலீசாரிடம் தல்வார் தம்பதி தான் கூறி, விசாரணையை திசை திருப்பி விட்டனர். இதனால், 24 மணி நேரம் வீணானது. அதே நேரத்தில், கொலை நடந்த இடத்தில் உள்ளூர் மக்களும் பத்திரிகையாளர்களும் உள்ளே புகுந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழித்து விட்டனர். * ஆருஷி உடல் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாள் தான் ஹேமராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த உடலை அடையாளம் காட்ட ராஜேஷ் தல்வார் மறுத்து விட்டார்.


* கொலை நடந்த இடத்தில், ஆருஷி உடலின் ஆடைகள் உட்பட அனைத்தும் சரியாக இருப்பது போன்று ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது. இந்த கொலையை வெளியாட்களோ, வேலைக்காரர்களோ செய்து இருந்தால், இதற்கு வாய்ப்பு இல்லை.


* வெளியாட்களோ, வேலைக்காரர்களோ கொலையை செய்து இருந்தால், ஹேமராஜ் உடலை மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்து இருக்க மாட்டார்கள்.


* வீட்டின் டைனிங் டேபிளில் ஒரு விஸ்கி பாட்டில் இருந்தது. அதில் பாதி அளவுக்கு விஸ்கி இருந்தது. அத்துடன் அந்த பாட்டிலில், ஆருஷி மற்றும் ேஹமராஜ் ஆகியோரின் ரத்தம் காணப்பட்டது. கொலை நடந்த பிறகு அதற்கு காரணமானவர்கள் விஸ்கி குடித்து இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை நடந்த போது வீட்டிற்குள் தல்வார் தம்பதி தூங்கி கொண்டிருந்தனர். அது போன்ற சூழ்நிலையில், கொலை செய்தவர்கள் மிகவும் நிதானமாக அங்கேயே அமர்ந்து மது அருந்துவார்களா?


* ஆருஷியின் அறை உட்புறமாக பூட்டப்பட்டு விட்டால், வெளியே இருந்து அவரது பெற்றோர் வைத்து இருக்கும் சாவி மூலமே திறக்க முடியும். ஆனால், காலையில் அந்த அறை திறந்தே காணப்பட்டது. வலுக்கட்டயமாக அந்த அறையை யாரும் திறக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.


* தல்வார் வீடு, 1,100 சதுர அடி பரப்பளவு கொண்டது. தல்வார் தம்பதியின் படுக்கை அறை மற்றும் ஆருஷியின் அறை இரண்டும் மர தடுப்பு மூலமே பிரிக்கப்பட்டு உள்ளது. நிலைமை இப்படி இருக்க, கொலை நடந்த இரவு அவர்கள் இருவரும் பக்கத்து அறையில் எதுவும் தெரியாமல் தூங்கி கொண்டு இருந்தனர் என்பதை நம்ப முடியவில்லை.


* இறுதியாக, 'கடைசியாக பார்த்தவர்கள்' விஷயமும் இந்த வழக்கில் சரியாக பொருந்தி வருகிறது. அந்த வீட்டில், தல்வார் தம்பதி, ஆருஷி, ஹேமராஜ் ஆகிய நான்கு பேர் தான் அன்று இரவு இருந்தனர். அவர்களை, இரவு 9:30 மணிக்கு டிரைவர் பார்த்துள்ளார். மறுநாள் காலை, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெளியாட்கள் மற்றும் வேலைக்காரர்கள் இதற்கு காரணம் இல்லை என்றால், வீட்டிற்குள் இருந்த தல்வார் தம்பதி தான் இதற்கு யார் காரணம் என்பதை கூற வேண்டும்.


இந்த பரிந்துரையை சி.பி.ஐ., குழு அளித்தது. அதே நேரத்தில், இந்த இரட்டை கொலை வழக்கில் தல்வார் தம்பதிக்கு சாதகமாக இருந்த விஷயங்கள் வருமாறு:
தல்வார் தம்பதிக்கு சாதகமான விஷயங்கள்


* தல்வார் தம்பதியிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடந்தது. ஆனால், அதன் முடிவுகள் அவர்களை வழக்கில் தொடர்புபடுத்தும் அளவுக்கு கிடைக்கவில்லை.


* நேரடி சாட்சிகள் இல்லை. முழு வழக்கும், தல்வார் தம்பதிக்கு எதிராக சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்தே முன் வைக்கப்பட்டது.


* கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை. தல்வார் தம்பதியை தொடர்புபடுத்தும் அளவுக்கு டி.என்.ஏ., கைரேகை போன்ற அறிவியல்பூர்மான சாட்சியங்கள் கிடைக்கவில்லை.


*ஆருஷி அறையில் ஹேமராஜ் இருந்தார் என்பதை நிருபிக்க நேரடி ஆதாரம் இல்லை.


* ஹேமராஜ் கொலை இந்த இடத்தில் தான் நடந்தது என கூறும் அளவுக்கு ஆதாரம் இல்லை.


* கொலைக்கான காரணம் தெரியவில்லை. யூகங்கள் அடிப்படையில் தான் வழக்கு தொடுக்கப்பட்டது.
காரணமே இல்லாத கொலை


இந்த வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற முடிவுககு வர காரணங்கள்:


* எந்த ஒரு கொலைக்கும் ஒரு காரணம் இருக்கும். இரவு 10:10 மணிக்கு ஆருஷி மற்றும் அவரது பெற்றோர் அந்த வீட்டில் இருந்ததற்கான புகைப்படங்கள் உள்ளன. அந்த வீட்டில் எல்லாமே சகஜமாக தான் காணப்பட்டதற்கு இது உதாரணம். ஆனால், இரட்டை கொலைகள் அந்த வீட்டில் இரவு 12:00 மணி முதல், 1:00 மணிக்குள் நடந்து இருக்க வேண்டும் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


* இரவு 10:00 மணி முதல், 12:00 மணி வரை என்ன நடந்தது என்பது தெரியவில்லை.


* தங்களின் ஒரே மகளை பெற்றோரே கொலை செய்வதற்கு காரணம் கிடைக்கவில்லை.


* போதிய தடயவியல் ஆதாரங்கள் கிடைக்காததால், கொலை நடந்த இடத்தில் கிடைத்த பொருட்களை கொண்டு அவை தான் கொலை ஆயுதம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.


* கொலை நடந்த இடத்தை ஒழுங்கு படுத்தி வைத்து இருந்த காரணத்தை தவிர, தல்வார் தம்பதி தான் இதற்கு காரணம் என கூறும் அளவுக்கு கொலை நடந்த இடத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை.


* உண்மையை கண்டறியும் சோதனையில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை.


* நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டே, இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


எனினும், இந்த கொலைகளுக்கு தல்வார் தம்பதிக்கு தொடர்பு உள்ளது என விசாரணை அதிகாரி முடிவுக்கு வந்தார். அதனால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார். இந்த கொலை வழக்கை விசாரித்த இரண்டு சி.பி.ஐ., குழுக்களிடமும் ஆலோசனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஒரு வழக்கு விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் தான் சி.பி.ஐ., விசாரிக்கும் வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். அந்த வகையில் தல்வார் தம்பதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என்பது அந்த ஆலோசனையின் போது தெரிய வந்தது.


ஆனால், விசாரணை நீதிமன்றம் வேறு விதமாக யோசித்தது. தல்வார் தம்பதியை தண்டித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து, விசாரணை நீதிமன்ற உத்தரவை, அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அனைத்து குற்ற வழக்குகளிலும், 100 சதவீதம் தீர்வு கிடைக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பல கொலை வழக்குகளை விசாரிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் கூட திணறி இருக்கின்றனர். அனைத்து விதமான முயற்சிகளையும் சி.பி.ஐ., மேற்கொண்ட பிறகு சில கொலை வழக்கு விசாரணைகளில் திருப்திகரமான முடிவு கிடைத்தது இல்லை. அந்த வழக்குகளின் வரிசையில் ஆருஷி - ஹேமராஜ் கொலை வழக்கும் இடம் பெற்று விட்டது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.