Header Ads

உணவு தராததால், ஓட்டல் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பொலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்..

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரவு 11 மணிக்கு மேல் அனைத்து கடைகளையும் அடைக்க போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் இரவு 11 மணிக்குள் வியாபாரிகள் கடைகளை அடைத்து வருகின்றனர்.

ஆனால் பரமக்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாமூல் கொடுத்து சில ஓட்டல்கள், டீக்கடைகள் 12 மணிவரை செயல்படுகிறது.

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சந்தைக் கடை அருகில் உள்ள ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டல் நடத்தி வருகிறார்.

கடந்த 29-ந் தேதி இரவு 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் கடையை மூடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர்கள் கஜேந்திரன், பாரதி, மாரிமுத்து ஆகியோர் ஒட்டல் ஊழியர்கள் பாண்டி, கருணாநிதி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பூட்ஸ் காலால் அவர்களை உதைத்துள்ளனர். ஊழியர்கள் தங்களை விட்டு விடும்படி போலீசாரிடம் கெஞ்சினர். ஆனால் மனிதாபிமானமே இல்லாத போலீசார் 2 பேரையும் இருட்டான பகுதிக்கு கூட்டிச்சென்று அடித்து உதைத்தனர். மேற்கண்ட காட்சிகள் ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகின.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் இளங்கோவன் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில், சம்பவத்தன்று எங்களது ஓட்டலுக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்பட 4 போலீஸ்காரர்கள் கடையில் வேலை பார்க்கும் பாண்டி, கருணாநிதி ஆகியோரிடம் சாப்பாடு கேட்டுள்ளனர். அவர்கள் ஓட்டலை மூடப் போகிறோம். சாப்பாடு இல்லை என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர்கள் தகாதவார்த்தைகளால் பேசி இருவரையும் தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து நான் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரிடம் கேட்ட போது அவர்களும் போலீசாருக்கு ஆதரவாக பேசி என்னை தாக்கினர். மேலும் என்னை கீழ்த்தரமாக பேசினர். கேஷியரிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை போலீசார் பிடுங்கி கொண்டனர்.

இதுகுறித்து கேட்டபோது, எங்களை எதிர்த்தால் ஓட்டல் வைத்து தொழில் நடத்த முடியாது எனவும், கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டினர்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.