பத்மாவதி’ படம் விவகாரம்: படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என இந்து ஆர்வலர்கள் மிரட்டல்
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’.
வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், நடிகர்கள் ரண்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 1–ந் தேதி திரைக்கு வருகிறது. பத்மாவதி படத்தில் வரலாற்றை தவறாத சித்தரித்து இருப்பதாகவும், இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ‘பத்மாவதி’ படத்தை தடை விதிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அலாகாபாத் ஐகோர்ட்டும் இதுதொடர்பான வழக்கை முன்னெடுக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். பத்மாவதி படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகள் நேரிடும் என திரையரங்குகளுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து உள்ளது. பத்மாவதி திரைப்படம் திரையில் வெளியாவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விமர்சனங்களையும், சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்தித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ராஜ்புத் இனத்தினர்கள் பெருமளவில் கிடையாது, இருப்பினும் இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.
பல்வேறு அரசியல் அமைப்புகள் தரப்பிலும் பத்மாவதி திரைப்படம் வெளியிடுவதற்கு எதிராக மிரட்டல் வெளியாகி உள்ளது.
இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்ட தலைவர் அமித் சவுதாரி பேசுகையில், இந்து கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களை எதிர்ப்போம் என கூறிஉள்ளார். முன்னாள் உத்தரபிரதேச மாநில மந்திரி மற்றும் பா.ஜனதா தலைவர் ராஜா மகேந்திர அரிதிமான் சிங், இது ராஜ்புத் இனத்தவர்களின் கெளவுரம் சம்பந்தப்பட்ட விஷயம் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்திலும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்