நகைகளை ஆட்டையை போடும் களவாணிப் பெண்கள் கையும் களவுமாக சிக்கினார்கள்!!
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது பெண்களிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்து 18 பவுன் நகைகளை மீட்டனர்.
வேலூர் அருகே கோவிலில் நகை பறித்த திருப்பூர் பெண்கள் கைது
கைதான 2 பெண்களை படத்தில் காணலாம்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் ஆடிப்பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த முதல் வெள்ளிக்கிழமை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது கூட்டநெரிசலை பயன்படுத்தி பள்ளிகுப்பத்தை சேர்ந்த பெண்களிடம் 4 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பெங்களூரு அமரவள்ளி நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி வசந்தம்மாள் (வயது 52) அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சரடையும்,
குடியாத்தம் கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்த ராமுலு மனைவி அருணா (58)விடம் 7 பவுன் தாலிச்சரடு ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்து இருவரும் கோவில் நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் கோவில் நிர்வாகத்தினர் கோவில் வளாகத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 3 பெண்கள் நகையை பறித்தது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. நகை பறிப்பவர்கள் உள்ளே வரலாம் என கருதி செயல் அலுவலர் குமரன் கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பக்தர்களிடம் திருடிய 3 பெண்கள் கோவில் கொடி மரம் முன் நிற்பதை பார்த்தார். உடனே கோவில் ஊழியர்களை அழைத்து அந்த 3 பெண்களையும் நைசாக பேசி அலுவலகத்திற்கு அழைத்துவரும்படி கூறினார்.
அதன்படி அந்த பெண்களை அலுவலகத்திற்கு ஊழியர்கள் அழைத்து வந்தனர். அது குறித்து பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் மூன்று பெண்களையும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிகள் மாரி (30), ஜோதி (35), பால்பாண்டியன் மனைவி வெள்ளியம்மாள் (28) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘வெள்ளிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்ய வந்த பெங்களுரூவை சேர்ந்த வசந்தம்மாள் மகள் அனுசுயாவிற்கு கோவிலில் சாமியாடிய போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உறவினர்கள் போல் நடித்து வசந்தம்மாள் கழுத்திலிருந்த தங்க சரடையும், கொசவன் புதூர் கிராமத்தை சேர்ந்த அருணா என்பவரிடம் பிரசாதம் வழங்கும் இடத்தில் கழுத்தில் இருந்த தாலி சரடையும் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
உடன் வந்த வெள்ளியம்மாள் உறுதுணையாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். அதன் பேரில் மாரி மற்றும் ஜோதி ஆகியோரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் வெள்ளியம்மாளிடம் விசாரணை நடந்து வருகிறது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்