மோடியும், ட்ரம்பும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போரிட முடிவு!
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்தியப் பிரதமர் மோடியும் உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போரிட முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நேற்று பிற்பகல் வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் பலியாகினர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டதுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், "இந்திய பிரதமர் மோடி நியூயார்க்கில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இரு நாட்டுத் தலைவர்களும் உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போரிட முடிவு செய்துள்ளனர்" என்று கூறியுள்ளது.
நியூயார்க்கில் நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மேவும் ட்ரம்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்