நடிகை அமலாபால் வாகனப் பதிவு சட்டரீதியாகவே நடந்தது: புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான்
நடிகை அமலாபால் வாகனப்பதிவில் தவறு நடைபெறவில்லை. சட்டரீதியாகவே நடந்துள்ளது. போலீஸ் விசாரணையிலும் உறுதியாகியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை தாக்கல் செய்வோம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார். அதேபோல் இவ்விவகாரத்தில் விதிமீறல் இல்லை என்று முதல்வர் நாராயணசாமியும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்ரக பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 1.5 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ. 23 லட்சம் வரை வரி கட்ட வேண்டும். புதுச்சேரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூ. 1.5 லட்சம் வரை வரி கட்டி விட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார். அதேபோல் நடிகர்கள் பகத் ஃபாசில், சுரேஷ்கோபி ஆகியோர் உட்பட பலர் பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இவ்விவகாரங்கள் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறி்ககை தாக்கல் செய்ய போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் ஆணையருக்கு உத்தரவிட்டார். அமலாபால் விவகாரத்தை விசாரிக்க முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ராஜீவ்ரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் எவ்வித விதிமீறலும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒருவர் வாகனம் வாங்கலாம். அதில் போக்குவரத்து விதிப்படி தடையில்லை. நடிகை அமலாபால் கர்நாடகத்தில் பென்ஸ்கார் வாங்கினார். சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். போக்குவரத்துத்துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய ஆதாரங்கள் தரவேண்டும்.
அதாவது, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, பாஸ்போர்ட், பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, அபிட்டவிட் ஆகியவை தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய அபிடவிட்டை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார்.
கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டுக்கு கால அவகாசம் உள்ளது.
தற்போது எஸ்எஸ்பி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் போலீஸ் குழு அவர் தாக்கல் செய்த சான்றில் இருந்த இருப்பிடத்தில் விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது.
கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை. இதில் தவறே நடக்கவில்லை.விதிமுறைப்படிதான் நடந்துள்ளது.
ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால் அந்தமாநிலம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆவணங்களை தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம். ஆளுநர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் என எனக்கு தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அங்கு பதிவு செய்ய மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.
புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரோல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியைக் குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரமுள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை இங்கு அதிகளவு உள்ளது . வெளிமாநில வாகனங்களும் இங்கு நிரப்பிச் செல்கின்றனர். அது தவறு என கூற இயலாது.
போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. முகவரி பரிசோதனையை போக்குவரத்துத் துறை செய்ய இயலாது. ஆர்டிஓ வாகனம் பதிவு செய்வோர் முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.
மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் போக்குவரத்து சட்டவிதியில் இல்லை. அவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டால் அதை செய்யத் தயாராக இருக்கிறோம்.
இரு சக்கர வாகனங்கள் மாதம் தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களும், கார்கள் 650 வாகனங்களும் பதிவெண் பெறப்படுகிறது. ஆம்னி பஸ்களுக்கு ஒரு சீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருக்கைக்கு ரூ. 1200 செலுத்த வேண்டும். ஆம்னி பஸ்கள் மாதம் எவ்வளவு பர்மிட் பெறப்படுகிறது என்ற தகவல் தற்போது இல்லை.
தவறு நடந்ததாக கூறுவது மாயை. தவறு நடக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு மோதலில்லை. இதுதொடர்பான முழு தகவல்கள் கேட்டால் உடன் ஆளுநருக்கு அனுப்புவோம். ஆளுநரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்'' என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்