Header Ads

மைத்துனராலும், சித்தியாலும் சித்திரவதைக்குள்ளான சிறுமி..! இலங்கை பொலீசாரின் அதிரடி நடவடிக்கை..

பொகவந்தலாவை  போனோகோட் தோட்டத்தில் தரம் 5 இல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்குட்படுத்திய சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் நேற்று சனிக்கிழமை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சிறுமியையும் பொபிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மீட்கப்பட்ட பத்து வயது சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். சிறுமியின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்துவருகின்றார்.
குறித்த சிறுமி கடந்த ஒன்பது வருடகாலமாக தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வருடம் சிறுமியை சித்தியிடம் ஒப்படைத்து விட்டு பாட்டி கொழும்பிற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் கல்வி நடவடிக்கைக்காகவும்  உணவு போன்ற வேறு செலவுகளுக்காகவும் மாதாந்தம் அவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து சிறுமியின் சித்திக்கு 15 ஆயிரம் ரூபா பணம் அனுப்புவதாக தெரிவிக்கபடுகிறது.
இந்நிலையில், சிறுமியை  வீட்டில் ஒரு வேலைக்காரியாக சித்தி நடத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் குறித்த சிறுமி கடுமையாக கையினால்  தாக்கப்பட்ட நிலையில், சிறுமி ஓடி அயல் வீடு ஒன்றில் மறைந்து இருந்ததாகவும் சிறுமியை தேடி சென்ற மைதுனர், சிறுமியை  தடி ஒன்றினால் கடுமையாக தாக்கி தலையை பிடித்து தள்ளிவிட்டதாக குறித்த சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் போனகோட் தோட்டமக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலை அடுத்து குறித்த தோட்டத்திற்கு சென்ற  பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளதோடு சிறுமியின் சித்தியையும் மைதுனரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் உடலில் உள்காயங்கள் காணப்படுவதோடு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்தியசாலைக்கு சிறுமி அனுப்பிவைக்கபடவுள்ள தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனவே கைதுசெய்யபட்ட இருவரையும் இன்று ஞாயிற்றுகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.