10 மாதங்களில் 13 ஆயிரம் உயிரைக் குடித்த துப்பாக்கி கலாச்சாரம்!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 13,149 பேர் துப்பாக்கி குண்டுக்கு உயிரை இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரமானது அதன் வரைபடத்தையே சிவப்பாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இதுவரை 309 நாட்கள் கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமான 307 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை அமெரிக்காவில் 13,000 பேர் துப்பாக்கு குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கையானது அதிகரித்தே வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி 11 வயதுக்கும் கீழுள்ள 600 குழந்தைகளும் துப்பாக்கி கலாச்சாரத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத்தை விட அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுப்பது உள்நாட்டில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துப்பாக்கிகள்தான்.
2014-ம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை கணக்கிட்டால் இது வெறும் 1 சதவிகிதம் எனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
கடந்த 30 நாட்களில் மட்டும் நடந்த இருவேறு துப்பாக்கி சூடு சம்பவத்தில் மொத்தம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் நேற்றைய தினம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆர்லாண்டோ இரவு விடுதியில் புகுந்து இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர். இது அமெரிக்காவில் அல் கொய்தா பயங்கரவாதிகளால் நடந்தப்பட்ட தாக்குதலைவிடவும் கொடூரமானதாக இருந்து வருகிறது.
இருப்பினும் அமெரிக்காவில் துப்பாக்கிகளால் பிரச்சனை இல்லை, அதனை கையாளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் பிரச்சனை என பேசியிருக்கிறார் ஜனாதிபதி டிரம்ப்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்