Header Ads

இறந்துவிட்டதாகக் கூறி உயிருடன் இளம்பெண் எரிப்பு; கணவர் தலைமறைவு!

உத்தரப்பிரதேசத்தில், இளம் பெண் ஒருவர் உயிருடன் இருக்கையிலேயே இறந்துவிட்டதாகக் கூறி எரிக்கப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நொய்டாவின் சாரதா வைத்தியசாலைக்கு கடந்த ஞாயிறன்று மாலை 21 வயதுப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


அவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறி சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இரவு 11.45 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர். எனினும் மரணம் குறித்து சந்தேகித்த அந்தப் பெண்ணின் சகோதரர் மறு நாள் காலை பொலிஸில் முறைப்பாடு செய்தார். அவரது முறைப்பாட்டை ஏற்ற பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே அந்தப் பெண் சிதையில் வைத்து எரிக்கப்பட்டுவிட்டார். சுமார் எழுபது சதவீதம் எரிந்த நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தினர். 


அதில், அந்தப் பெண் சுவாசக் கோளாறால் இறக்கவில்லை என்றும், உயிருடன் இருக்கும்போதே தான் சிதையில் வைத்து எரியூட்டப்பட்ட அதிர்ச்சியானால்தான் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் நுரையீரலிலும் மூச்சுக் குழாயிலும் கரித்துகள்கள் இருப்பதாகவும், 


ஒருவர் சுவாசித்துக்கொண்டிருக்கும்போதே அவர் எரியூட்டப்பட்டால்தான் இது சாத்தியம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பெண்ணின் கணவரது குடும்பத்தினர் மீது அவரது சகோதரர் வழக்குப் பதிவு செய்துள்ளார். எவ்வாறெனினும், பெண்ணின் கணவர் தலைமறைவாகிவிட்டார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.